தெய்வத் தமிழ்க்கவி
நினைத்த நேரத்தில் தாம் நினைத்தவற்றைப் பாடலாக்கிப் பாடிய மறுகணமே, அவ்வண்ணம் நிகழ்த்திக்காட்டும் தெய்வீக ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று நிறுவிய புலவர்களைப் பெற்ற பெருமைக்குரியது தமிழகம்.
நினைத்த நேரத்தில் தாம் நினைத்தவற்றைப் பாடலாக்கிப் பாடிய மறுகணமே, அவ்வண்ணம் நிகழ்த்திக்காட்டும் தெய்வீக ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று நிறுவிய புலவர்களைப் பெற்ற பெருமைக்குரியது தமிழகம். அத்தகையோரை, அறம்பாடும் புலவர்கள், ஆசுகவிகள் என்று மக்கள் போற்றினர். தன்னலத்தை விடவும், பொதுநலம் பேணவும், தீயவர்களைச் சாடவும், தெய்வத்தைப் போற்றவும் தீந்தமிழைத் துணையாகக் கொண்டவர்கள் இத்தகைய புலவர்கள். அந்த வகையில் செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர் ஆவார்.
சிவகங்கை மாவட்டத்தில் 1750}ஆம் ஆண்டு பிறந்தவர். மருதுபாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர். முத்தப்பரின் கவிபாடும் ஆற்றலையும், வாக்குப்பலிதம் ஆகும் வல்லமையும் உணர்ந்த கோவிலூர்த் திருமடம் அவருக்கு, "பாடுவார்' என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. அன்றிலிருந்து அவர் "பாடுவார் முத்தப்பர்' ஆனார்.
இளம்வயதில் தன் தாயிடம் பணம்பெற்று உப்பு வாணிகம் செய்யக் கிளம்பியபோது வழிமறித்துத் தொல்லை செய்த ஆயக்காரனைப் பார்த்து,
Advertisement
""ஆயக்காரன் அவன் இல்லம்
அடியோடு எரிந்து அழிந்திடவே''
என்று அறம் பாடினார். அவருக்கு முன், இதுபோல் எத்தனை பேருக்குத் தொல்லை கொடுத்துச் சேர்த்த பணத்தில் ஆயக்காரன் கட்டிய வீடோ என்னவோ, உடனே எரிந்து சாம்பலானது. இதனால், முத்தப்பர் புகழ் பரவத்தொடங்கியது. இதுவே அவர் பாடிய முதல் பாடல் என்பர்.
வறட்சி நீக்கவும், வான்மழை பொழியவும் பாடிய இவர், ஒருமுறை குன்றக்குடி விழாப்போதில் மக்கள் வேண்ட, மழைக்காக ஒரு பாடல் பாடினார். பாடலை முடித்த அக்கணமே, கருமேகங்கள் கூடிப் பெருமழையைக் கொட்டி, அனைத்து நீர் நிலைகளையும் நிரப்பின; நிற்காது தொடர்ந்தன. பொறுக்கமுடியாது மக்கள் மீண்டும் வேண்ட,
""வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்
நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு
கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்''
என்று பாடிய உடனே நின்றது வான்மழை.
இவ்வாறு பிறர் துயர்நீக்கல், தன்னுணர்வு சுட்டல், உணவிட்டவரைப் போற்றுதல், இகழ்ந்தோரை வசைபாடல், குறுநிலமன்னர் முதலான வசதியுடையாரிடத்து உதவி கேட்டல், நன்றி பாராட்டல் முதலான நிலைகளில் முத்தப்பரின் தனிப்பாடல்கள் அமைகின்றன. அவற்றுள் வெண்பாப்புலிக் கவிராயரோடு நிகழ்ந்த வாதப்-பிரதிவாதங்கள் இலக்கியச்சுவை வாய்ந்தவை.
திண்ணைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொண்ட முத்தப்பர், தமது சொந்த முயற்சியில் தமக்குக் கிட்டிய தமிழ் இலக்கண, இலக்கியப் படைப்புகளை உள்வாங்கிக் கொண்டவர்.
முத்தப்பர் இயற்றியவையாக அறியக் கிடைப்பன தனிப்பாடல்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள். அவற்றுள் முதலாவதான திருமுகவிலாசம், 96 வகையான சிற்றிலக்கியப் பிரிவுகளுள் அடங்காதது; தனித்தன்மை கொண்டது. அதுபோல், இராங்கியம் கருப்பர் குதிரையடியும் எனலாம். இவை தவிர, நகரவாழ்வு, ஜெயங்கொண்டார் சதகம், உச்சினி மாகாளியம்மன் கும்மி, தல்லாகுளம் கருப்பர் அகவல், மருதம் பிள்ளையார் பதிகம், கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் பதிகம், குன்றக்குடி முருகன் பதிகம், பழனியாண்டவர் பதிகம் ஆகியனவும் அவர் பாடியுள்ளார்.
இவற்றுள், ஜெயங்கொண்டார் சதக நூலைப் பதிப்பித்த வித்துவான் நா.கிருஷ்ணசாமி நாயுடு, ""இப்புலவர் பெருமான் அவ்வவ்வமையங்களிற் பாடிய தனிப்பாடல்கள் இன்னும் நூற்றுக்கணக்காய் உள்ளன. இவையன்றி, ஜெயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ், பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறையந்தாதி, நேமநகர்க் கலம்பகம், ஜெயங்கொண்ட சோழீசர் ஊசற்றிருநாமம் முதலிய பிரபந்தங்களும் நம் வித்வப்பெம்மானால் இயற்றப்பெற்றனவாமென்ப'' என்கிறார். இவர் பாடிய, திட்டாணிக்கருப்பர் குளுவ நாடகம் ஏட்டுப்பிரதியாகவே உள்ளது என்கிறார் இவரைப் பற்றி ஆய்வுசெய்த தே.சொக்கலிங்கம்.
வாழ்நாள் முழுதும் பாடிப் புகழ்பெற்ற, பாடுவார் முத்தப்பர், தம் மறைவு குறித்தும் பின்வரும் பாடலை எழுதித் தமிழிடம் இருந்து விடைபெற்றார்.
தொகுதிபெறு சர்வசித்து வருடந் தன்னில்
துலாமாதம் தேதிபத்து சுக்ரவாரம்
பகுதிபெறு செயங்கொண்ட சோழீசர்தம்
பாதமதிற் சேர்ந்துவெகு பலம்பெற் றேனே
இப்பாடலைக் கொண்டு, அவரது நிறைவுக்காலம், 21.10.1823 என்று வரையறுப்பதுண்டு. இவர் பாடிய ஒரு மங்கலப் பாடலை நகரத்தார் இன்றும் துதிக்கின்றனர். திருவுருவச்சிலையோடு கீழச்சிவல்பட்டி, சந்நிதி வீதியில் எழில்மாடமும் அமைத்து அவர் மரபினோர் ஆண்டுதோறும் அன்னாருக்குக் குருபூசை நடத்தி வருகின்றனர்.