பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
உறவினரைப் பகுத்து அளிக்காதவன்: பழமொழி நானூறு பாடல் 366
பல் கிளையுள் பாத்துறான் ஆகி, ஒருவனை
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு. (பாடல்: 366)
தமக்கு வருவனவற்றைத் தம் உறவினர்க்குப் பகுத்து அளிக்காதவனாக இருந்து வறுமையை அடிப்படையாக வைத்து உறவையும் மனிதரையும் வேறுபடுத்தி நன்கு உணராது சொல்லுதல் சிறந்த சொற்பொழிவில் வளமான சொற்களைச் சொல்லாதது போலாகும். ஒரு கூட்டத்தில் ஒருவரை மட்டும் தனியே பிரித்துச் சரியாக ஆராயாமல் நல்லவர், கெட்டவர் என்று முடிவு செய்வது துன்பம் தருவதாகும்.