அமெரிக்காவில் தாறுமாறாக நடைபாதையில் கார் ஓட்டிய பெண்: ஒருவர் சாவு, 26 பேர் காயம்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வேண்டுமென்றே நடைப்பாதையில் காரை ஏற்றிய விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வேண்டுமென்றே நடைப்பாதையில் காரை ஏற்றிய விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 26 பேர் காயமடைந்தனர். பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் அந்த காரை ஓட்டி வந்த விவரம் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
வர்த்தக நிறுவனங்களும், உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ள லாஸ் வேகாஸ் பகுதி எப்போதுமே மிகுந்த பரப்பரப்பாக இயங்கும். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் இங்கு வந்து செல்வர்.
இந்நிலையில் நேற்று மாலை இங்கு தனது காரில் வந்த 20-வயது மதிக்கதக்க பெண், காரை வேண்டுமென்றே நடைமேடையில் ஏற்றியுள்ளார்.
இந்நிகழ்வை நேரில் கண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், 'ஏதோ சாகசம்தான் நடைபெறுகிறது என நினைத்தேன். ஸ்னோபால் விளையாட்டில் 'பின்'கள் விழுவது போல், மனிதர்கள் விழுந்தனர். சிலர் அந்தரத்தில் பறக்கவும் செய்தனர்' என்றார்.
இச்சம்பவத்தில் அக்காரில் இருந்த குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என கூறிய போலீஸார், அந்த பெண்ணை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட அப்பெண், எக்காரணத்தில் இவ்வாறு செய்தார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தீவிரவாதச் செயல் அல்ல என்று விளக்கமளித்த போலீஸார், இந்த விபத்தில் ஒருவர் இறந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் கூறினர்.
இந்த விபத்து நடந்த அதேநாளன்றுதான் லாஸ் வேகாஸ் நகரில் 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியும் நடைபெற்றது.