டிஜிட்டல் கைது மோசடி: ரூ.15 கோடிக்கு மேல் இழந்த கர்நாடக தொழிலதிபர்!
கர்நாடகத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 81 வயது தொழிலதிபரிடம் இருந்து ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
கர்நாடகத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 81 வயது தொழிலதிபரிடம் இருந்து ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அந்த தொழிலதிபருக்கு கடந்த ஆறு வாரங்களாக விடியோ அழைப்புகள் உட்பட பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர் ரூ.25 லட்சத்தை சட்டவிரோதமாகப் பணமாக்கியதற்காக ரூ.5 லட்சம் கமிஷன் பெற்றதாகவும், சட்டவிரோத நிதி நடவடிக்கைகளுக்காக அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.
பணமோசடி வழக்கில் அவரைக் கைது செய்யப்போவதாக மிரட்டிய அந்த குமபல், தொழிலதிபரை வற்புறுத்தி அவரது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து, பணத்தைப் பாதுகாப்பான அல்லது அரசு கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளனர். விசாரணை முடிந்ததும பணம் திருப்பித் தரப்படும் என்று அவருக்கு அந்த கும்பல் உறுதியளித்துள்ளனர்.
ஆனால், அதன் பிறகு அந்த கும்பலிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் அவர்கள் பயன்படுத்திய எண்களைத் தொழிலதிபர் தொடர்புகொண்டுள்ளார். அதனையும் தொடர்புகொள்ள முடியாததால் பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த வாரம் போலீஸில் புகார் அளித்தார்.
சைபர், பொருளாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் மாற்றப்பட்ட கணக்கைக் கண்டறிந்தனர். எனினும், அதிலிருந்து ரூ.90 லட்சத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பெலகாவி போலீஸ் ஆணையர் ஒரு தனிப்படையை அமைத்துள்ளார்.