முகநூல் பதிவுக்கு எதிர்வினை: வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் சேதம்; வீடுகள் கொள்ளை !
இஸ்லாமிய மதத்தை விமர்சித்து முகநூலில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாக, வங்கதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட ...
டாக்கா: இஸ்லாமிய மதத்தை விமர்சித்து முகநூலில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினையாக வங்கதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வங்கதேசத்தின் பிரமன்பரியா மாவட்டத்தில் இந்துக்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஹரின்பெர் என்ற கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் இஸ்லாமிய மதத்தை விமர்சித்து சமூக வலைதளமான முகநூலில் கருத்துக்களை பதிவு செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் ரஸ்ராஜின் இந்த செயலை கண்டித்து அங்குள்ள நாசிர்நகரில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் பொழுது வன்முறை வெடித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர் நாசிர்நகரில் உள்ள 15 இந்து கோவில்களை அவர்கள் சேதப்படுத்தினர். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளை அவர்கள் சேதப்படுத்தி கொள்ளையிட்டனர். இதில் சிலர் காயமும் அடைந்தனர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து நாசிர்நகர், மதப்பூர் உள்ளிட்ட பகுதியில் போலீஸ் அதிரடிப்படை, துணை ராணுவம் என ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.