முன்னாள் பிரதமரும், பாஜக முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (திங்கள்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவில் மூச்சுத் திணறலும் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, வாஜ்பாய்க்கு எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கண்காணிப்பின்கீழ் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது என்று பாஜக அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, வைகோ உள்ளிட்டோர் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வாஜ்பாயின் உடல் நலம் சீராக உள்ளது என்று தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவருடைய தொற்று நோயை தடுக்கும் வரை அவர் மருத்துவமனையில் தான் இருப்பார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.