முகப்பு
உலகம்

தொழிற்சாலையால் புற்றுநோய் பாதிப்பு: மன்னிப்புக் கோரியது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்

தங்களது செமிகண்டக்டர் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.

Updated On : 23 நவம்பர், 2018 at 11:42 AM
பகிர்:


தங்களது செமிகண்டக்டர் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

உடல்நிலை பாதித்த தொழிலாளர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் நாங்கள் பகிரங்க மன்னிப்புக் கோருகிறோம் என்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி-நம் கூறியுள்ளார். மேலும், செமிகண்டக்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ள வேண்டிய உடல்நலனை உறுதி செய்யும் பணியை நாங்கள் சிறப்பாகக் கையாளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சாம்சங் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 240 தொழிலாளர்கள், பணியிடம் தொடர்பான பல்வேறு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகினர். அதில் சுமார் 80 பேர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்து விட்டனர்.

இதில், 16 வகையான புற்றுநோய், மிக அரிதான உடல்நல பாதிப்பு, கருக்கலைப்பு, மற்றும் சில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தால் தங்களது குடும்ப உறவுகளை இழந்தவர்கள், இந்த மன்னிப்பும், இழப்பீடும், தொழிற்சாலையால் கடந்த காலங்களில் தாங்கள் சந்தித்த அவமரியாதைக்கு ஈடாகாது என்று கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.