வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் இன்று துப்பு துலங்கியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் சுங்காரா (44) தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), பிள்ளைகள் பிரபாஸ் (14) சுஹாஸ் (11) ஆகியோரை அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நால்வரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையிலேயே, இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஆனால், கொலை மற்றும் தற்கொலை செய்யும் முடிவை சந்திரசேகர் எடுக்க என்ன காரணம் என்பது பற்றி குடும்ப உறவினர்கள், நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் சங்கரா. இவர் தனது குடும்பத்தாருடன் அயோவா மாகாணத்தில் வசித்து வந்தார்.
அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் சனிக்கிழமை காலை அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, சந்திரசேகர், அவரது மனைவி லாவண்யா சங்கரா, இரண்டு மகன்கள் உள்பட நான்கு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர்களது உடல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.