முகப்பு
உலகம்

உலையில் வைத்து எரிக்கப்பட்டாரா சவூதி பத்திரிகையாளர் கஷோகி?: வெளியான அதிர்ச்சித்  தகவல் 

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் கஷோகி, தூதரின் இல்லத்தில் உள்ள உலையில்  வைத்து எரிக்கப்பட்டார் என்று அதிர்ச்சித்  தகவல்

Updated On : 4 மார்ச் 2019, 3:21 pm IST
பகிர்:

அங்காரா: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் கஷோகி, தூதரின் இல்லத்தில் உள்ள அடுப்பில் வைத்து எரிக்கப்பட்டார் என்று அதிர்ச்சித்  தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆள்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.

Advertisement

Advertisement

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதை  ஒப்புக் கொண்டது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

வெட்டப்பட்ட அவரதுஉடல் பாகங்கள் உள்ள பிளாஸ்டிக் பைகள்,  துணைத் தூதரகத்துக்கு அருகில் உள்ள சவூதி தூதரின் இல்லதிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தூதரின் வீட்டுச் சுவற்றில் ரத்தக்கறைகள் கண்டறியபட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் துணைத் தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் கஷோகி, தூதரின் இல்லத்தில் உள்ள அடுப்பில் வைத்து எரிக்கப்பட்டார் என்று அதிர்ச்சித்  தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:

சவூதி  துணைத் தூதரின் இல்லத்தில் சமீபத்தில் கொதி உலை (சூளை) ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த உலையானது சுமார் 1000 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் தாங்கக் கூடிய ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. இது முழுவதுமாக துணைத் தூதரின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டது. இந்த பணிகளை துருக்கிய அதிகாரிகள் கண்காணித்தார்கள் என்று கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலார் ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சி விசாரணையில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.