முகப்பு
உலகம்

மீண்டும் கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடும் பிரேசில்!

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு வலைதளத்தில் இருந்து தரவுகளை நீக்கிய பிரேசில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மீண்டும் கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடவுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு வலைதளத்தில் இருந்து தரவுகளை நீக்கிய பிரேசில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மீண்டும் கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடவுள்ளது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் பிரேசில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-ஆம் இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரிட்டனை அடுத்து 3-ஆம் இடத்தில் உள்ளது.

இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பலி எண்ணிக்கை பதிவாகி வந்ததாலும், வரும் வாரங்களில் கரோனா பரவல் மேலும் உச்சத்தை அடையும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துக் கூறியதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு வலைதளத்தில் இருந்து பிரேசில் சுகாதாரத் துறை தரவுகளை நீக்கியது. 

இதையடுத்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக பல்வேறு விமரிசனங்களை எழுப்பியது. உலக சுகாதார நிறுவனமும் இதுகுறித்த தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 

அதேநேரத்தில்' கரோனா தரவுகள் குறித்த அறிக்கையை மேம்படுத்தவே பணிகள் நடைபெற்று வருவதாக அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ கூறியிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடும்படி உத்தரவிட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று நீதிபதி அலெக்சாண்டரே கி மொரேஸ் உத்தரவிட்டார். அதன்படி பிரேசில் அரசு இன்று அல்லது நாளை கரோனா பாதிப்பு தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

வோல்டோமீட்டர் தரவுகளின்படி, பிரேசிலில் இதுவரை 7,42,084 பேர் அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,497 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 3,25,602 பேர் குணமடைந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →