பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: வங்கதேசம்
வங்கதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க அந்த நாட்டு அரசு இன்று (திங்கள்கிழமை) ஒப்புதல் அளித்தது.
வங்கதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க அந்த நாட்டு அரசு இன்று (திங்கள்கிழமை) ஒப்புதல் அளித்தது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வங்கதேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு இந்த சட்ட முன்மொழிவு வழிவகுக்குகிறது."
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பி வருகிறது.