அமெரிக்காவில் கரோனா பாதிப்பு, பலி தொடர்ந்து அதிகரிப்பு
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், அமெரிக்காவில் புதிதாக கரோனா பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், அமெரிக்காவில் புதிதாக கரோனா பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உருமாறிய அதிதீவிர டெல்டா வைரஸ் பரவிவருவதே கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 7 நாள்களில் புதிதாக கரோனா பாதிப்பு (1,33,056) சராசரியாக 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய 7 நாள்களோடு ஒப்பிடுகையில் (1,16,740) அதிகமாகும்.
அதுபோல, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சராசரியும் கடந்த 7 நாள்களில் 11,521 ஆக அதாவது 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய 7 நாள்களில் 10,088 ஆக இருந்தது.
பலி எண்ணிக்கையும் உயர்ந்தே உள்ளது. கடந்த 7 நாள்களில் 641 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரத்தில் 578 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,88,14,596 ஆகவும், பலி எண்ணிக்கை 6,46,667 ஆகவும் உள்ளது. கரோனாவிலிருந்து 3,05,70,229 பேர் மீண்டுள்ளனர்.