பஞ்சஷேர் மாகாணத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு
தலிபான்களின் பிடியில் சிக்காத பஞ்சஷேர் மாகாணத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான்களின் பிடியில் சிக்காத பஞ்சஷேர் மாகாணத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தலிபான் கைப்பற்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் காபூல் உள்பட அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருவது அந்நாட்டில் உள்ள பஞ்சஷேர் மாகாணம். சுற்றிலும் மலைகள் சூழ, இந்நகரம் அமைந்துள்ளதே அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு. மேலும் முன்காலத்தில் இருந்தே இப்பகுதி மக்கள் தைரியமாக தலிபான்களை எதிர்த்து வருகின்றனர். இதற்கு அப்பகுதியில் உள்ள தலைவர்களும் ஒரு காரணம். தான் பிறந்த இந்த மாகாணத்தில்தான் துணை அதிபர் அமருல்லா சலே தஞ்சம் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இப்பகுதியையும் கைப்பற்ற முனைந்துள்ள தலிபான்கள் அப்பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளனர். தலிபான்களிடம் இருந்து தப்பிய நூற்றுக்கணக்கான ஆப்கன் வீரர்கள், அப்பகுதியில் தனி இயக்கத்தை நடத்தி வரும் அகமது மசூதுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சஷேர் மாகாணத்தையும் கைப்பற்றும் நோக்கில் அங்கு தொலைத்தொடர்பு சேவையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்பின்றி சிரமப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதுபோல பஞ்சஷேர் மாகாணத்தை ஒட்டியுள்ள போக்குவரத்து சாலைகள் அனைத்தையும் மூடியுள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருள்கள் குறைவாக கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ள நிலையில் பஞ்சஷேர் பகுதியை தலிபான்கள் குறிவைத்து தக்கை வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.