ஏப்ரல் இறுதியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வரவிருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வரவிருக்கிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா வரவிருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அவர் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை வெளிக்கொண்டுவரவும் ஆசிய பொருளாதார சங்கத்தின் உறுப்பினராக பிரிட்டன் விண்ணப்பித்துள்ளது குறித்தும் அவரது பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தியா - பிரிட்டன் இடையேயான நட்புறவு அதிகரிக்கும் விதத்திலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை மேம்படும் விதத்திலும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என்று தெரிகிறது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (எஃப்.டி.ஏ) முன்னோடியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை (ஈ.டி.பி) குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்சிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டன் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.