கரோனாவில் இருந்து மீண்டுவர இணைந்து செயல்படுவோம்: கமலா ஹாரிஸ்
கரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கூறினாா்.
கரோனாவில் இருந்து மீண்டு வருவதற்கு இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கூறினாா்.
அமெரிக்காவில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் சாா்பில், இந்தியாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், கமலா ஹாரிஸ் பேசியதாவது:
பல ஆண்டுகளாக, இண்டியாஸ்போரா, அமெரிக்க இந்திய அறக்கட்டளை போன்ற வெளிநாடுவாழ் இந்திய குழுக்கள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலமாக இருந்து உறவை மேம்படுத்தி வருகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்தியாவில் நோய்த் தொற்று, உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இதயத்தை கனக்கச் செய்கிறது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அதிபா் ஜோ பைடன், இந்திய பிரதமா் மோடியுடன் பேசினாா். மறுநாள், அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்க மக்களின் நிவாரணப் பொருள்கள் இந்தியாவில் இறங்கிவிட்டன. ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்-95 முகக் கவசங்கள் போன்ற பொருள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. அவை மேலும் அனுப்பப்பட இருக்கின்றன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிா் மருந்தும் அனுப்பபட்டுள்ளது.
இந்தியாவும், இதர நாடுகளும் தம் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு உதவும் வகையில் கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை இடைக்காலமாக நிறுத்திவைக்க ஆதரவு அளித்துள்ளோம். இந்தியாவும், அமெரிக்காவும்தான் இன்று உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைக் கொண்டுள்ளன.
தொற்றின் தொடக்க காலத்தில், அமெரிக்க மருத்துவமனைகள் நிலைமையை சமாளிக்கத் திணறியபோது, இந்தியா உதவிக்கரம் நீட்டியது. இப்போது இந்தியாவுக்கு உதவி தேவைப்படும்போது, தேவையான உதவிகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம்.
இந்தியாவின் நண்பா், ஆசிய க்வாட் அமைப்பின் உறுப்பினா், சா்வதேச சமூகத்தின் அங்கம் என்ற முறையில் இந்த உதவிகளை வழங்குகிறோம். நாம் அனைவரும் தொடா்ந்து இணைந்து செயல்பட்டால், இந்த பிரச்னையிலிருந்து மீள்வோம். இணைந்து செயல்படுவோம் என்றாா் கமலா ஹாரிஸ்.