முகப்பு
உலகம்

கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்த மருத்துவமனை: அதுவும் 30 ஆண்டுகளாக

ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான

Updated On : 12 நவம்பர், 2021 at 12:34 PM
கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்த மருத்துவமனை: அதுவும் 30 ஆண்டுகளாக
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM


ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான் அதிர்ச்சியின் உச்சக்கட்டம்.

யோமுயிரி ஷிம்புன் என்ற செய்தி நிறுவனம் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், ஒசாமா பல்கலைக்கழக மருத்துவமனையில், சில குடிநீர் குழாய்கள், கழிவறை குழாயுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குடிநீர் குழாய்களை இணைக்கும் பணியின்போது, அது தவறுதலாக, கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இது ஒன்றோ அல்லது இரண்டோ நாள்கள் அல்லது ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததல்ல. இந்த மருத்துவமனையைக் கட்டும்போது 1993ஆம் ஆண்டு அதாவது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையைக் கட்டி திறந்தது முதல், இந்த தவறு நடந்து கொண்டிருந்துள்ளது.

சரி அப்படி ஒன்று அல்லது இரண்டு குழாய்களில் தவறாக கழிவுநீர் வந்திருக்குமா என்றால் அதுவுமில்லை. சுமார் 120 குழாய்களில் இவ்வாறு தவறுதலாக கழிவுநீர் வந்து கொண்டிருந்துள்ளது. இந்த தண்ணீரைத்தான், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஊழியர்கள் குடிக்க, பாத்திரம் கழுவ, பல் தேய்க்க என்று, அதன் ஆதாரத்தை அறியாமல் பயன்படுத்தி தங்களை சுத்தப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த தவறு எப்படித்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் அது ஒரு வெட்கக்கேடு. கடைசி வரை இந்த தவறை யாருமே கண்டுபிடிக்கவில்லை. மருத்துவமனைக் கட்டடம் பாழடைந்துவிட்டதால், புதிய கட்டடம் கட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

அந்த கட்டடத்தில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்தபோதுதான், இதுநாள் வரை பாதுகாப்பற்ற தண்ணீரை குடிநீராக மருத்துவமனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதில் இன்னும் ஆச்சரிப்படத்தக்க விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வாரமும், அந்த மருத்துவமனை நிர்வாகம், குடிநீர் சுத்தமாக, நிறமில்லாமல், துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது வழக்கமாம். இதுவரை பதிவான தகவல்களின் அடிப்படையில், அந்தக் கழிவறை நீரைப் பயன்படுத்தியவர்கள் யாருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் இல்லை என்கிறது வரலாறு.

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவிய நிலையில், ஏராளமான பழைய நோயாளிகளும், மருத்துவமனை பழைய ஊழியர்களும் மருத்துவமனையில் திரண்டு வந்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. இது தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை சார்பில் சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.