அமெரிக்காவில் பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டத்தில் சிக்கல்
அமெரிக்காவில் பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பூஸ்டர் தவணை செலுத்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், மாடர்னா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
கரோனாவுக்கு எதிராக கூடுதலான பாதுகாப்பை அளிக்கும் நோக்கில் பூஸ்டர் தவணை செலுத்த அமெரிக்கா தயாராகிவருவதாக பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டாவது தவணை செலுத்தி கொண்டு எட்டு மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தவணை செலுத்திக்கொள்ளலாம் என அவர் பரிந்துரை செய்தார்.
ஆனால், பூஸ்டர் தவணை குறித்த முக்கியமான தரவுகளை அளிக்காத காரணத்தால் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. எனவே, செப்டம்பர் 20ஆம் தேதி மாடர்னா தடுப்பூசியின் பூஸ்டர் தவணை பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.
இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவைக்கு மாடர்னா நிறுவனம் போதுமான தரவுகளை அளிக்கவில்லை" என்றார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மாடர்னா நிறுவனத்திடம் கூடுதலான தரவுகளை கேட்டுள்ளது. இதன் காரணமாக, பூஸ்டர் தவணை செலுத்தும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.