பிஎச்டி, முதுகலை படிப்புகளுக்கு மதிப்பில்லை: ஆப்கானிஸ்தான் புதிய கல்வித்துறை அமைச்சர்
செயல்பாடுகளில் மாற்றத்தை காண்பீர்கள் என தலிபான்கள் உறுதி அளித்திருந்த நிலையில், புதிய கல்வித்துறை அமைச்சரின் கருத்து விமரிசனத்திற்குள்ளாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஒரு மாதம் கூட நிறைவுபெறாத நிலையில், புதிய அமைச்சரவையை நேற்று தலிபான்கள் அறிவித்தனர். இதன்பிறகு, அந்நாட்டுடனான உறவு எப்படி அமையப்போகிறது என்பது குறித்து பல நாடுகள் அச்சம் தெரிவித்துவருகிறது.
இதனிடையே, தலிபான் தலைவர் முல்லா ஹசன் அகுண்ட் தனது முதல் அறிக்கையில், "எதி்ர்காலத்தில், அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின்படி ஒழுங்கப்படுத்தப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் வகையில் முந்தைய ஆட்சி போல் இல்லாமல் சிறப்பாக ஆட்சி செய்வோம் என தலிபான்கள் உறுதி அளித்திருந்தது. இருப்பினும், அவர்களின் சொல்லுக்கும் செயல்களுக்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கல்வித்துறை அமைச்சர் ஷேக் மெல்பி நூரல்லா உயர் கல்வி குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவிப்பது போன்ற விடியோ ஒன்று வெளியாக விமரிசனத்திற்குள்ளாகியுள்ளது.
இதையும் படிக்க | தலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்; துணைப் பிரதமா் முல்லா பராதா்
அதில், "பிஎச்டி, முதுகலை போன்ற பட்டங்களுக்கு இன்று மதிப்பில்லை. ஆதிகாரத்தில் இருக்கும் முல்லாக்களும் தலிபான்களும் பிஎச்டி, முதுகலை, பள்ளி படிப்புகள் கூட முடிக்காதவர்கள். ஆனால், அவர்கள்தான் தற்போது சிறந்து விளங்குகின்றனர்" என ஷேக் மெல்பி தெரிவித்திருந்தார்.