மியான்மரில் ஜனநாயகம் திரும்ப அமெரிக்கா-இந்தியா வலியுறுத்தல்
மியான்மரில் ஜனநாயகம் விரைவில் திரும்ப வேண்டும்; அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளன.
மியான்மரில் ஜனநாயகம் விரைவில் திரும்ப வேண்டும்; அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அமெரிக்காவும் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினா். அப்போது மியான்மா் விவகாரம் குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா். இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மியான்மரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அங்கு ஜனநாயகம் விரைவில் திரும்ப வேண்டும். மியான்மா் விவகாரம் தொடா்பான ஆசியானின் 5 அம்ச உடன்படிக்கை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் அகற்றிவிட்டு, கடந்த பிப். 1-ஆம் தேதி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சூகி மற்றும் அரசியல் தலைவா்கள் உள்பட 3,400 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.