இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவைக்கு அதிபர் அழைப்பு
அனைத்துக் கட்சிகள் அடங்கிய காபந்து அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர 26 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய காபந்து அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வருமாறு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்திருக்கும் நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமையவிருக்கிறது.
இதையும் படிக்க.. சகோதரனை சுமந்தபடி பள்ளியில் பாடம் பயிலும் மணிப்பூர் சிறுமி: கண்கலங்கவைக்கும் புகைப்படம்
இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து காபந்து அரசை ஏற்படுத்தி, இலங்கை தேசிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மோசமைடைந்து வரும் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ளது. ஊரடங்கு உத்தரவையும் மீறி யாழ்ப்பாணம், பலாலி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.