ரஷியாவின் உண்மையான இலக்கு ஐரோப்பா தான் என உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை அழித்துள்ள ரஷியப் படையை உக்ரைனும் எதிர்கொண்டு வருகிறது. ரஷியத் தரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷியாவே ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், விடியோ ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் வெலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியதாவது:
ரஷியாவின் உண்மையான இலக்கு ஐரோப்பாதான். ஏனெனில் ரஷியாவின் ஆக்கிரமிப்பு வரையறுக்கப்படவில்லை. மேலும் உக்ரைன் மீது மட்டும் இலக்கு வைக்கவில்லை. ஆனால் எங்களுடைய வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஐரோப்பாவின் முழு திட்டமும் ரஷிய கூட்டமைப்புக்கு எதிராக உள்ளது. எங்களுக்கு காத்திருக்க நேரமில்லை. சுதந்திரத்துக்கும் காத்திருக்க நேரமில்லை. நாங்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய நேரம் இது.
அனைத்து ஜனநாயக நாடுகளின் பாதுகாப்பிற்காக உக்ரைன் மீதான படையெடுப்பு நிறுத்தப்பட வேண்டும்.
ரஷியாவின் எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுக்கு அனைத்து நாடுகளும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் அந்த இரண்டும்தான் அவர்களின் நம்பிக்கை. அதனை உடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.