மலேசியாவின் 5 மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 56,159 பேர் தங்கள் வீடுகளை விட்டு முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தீபகற்பத்தின் கிழக்கு கரையோரத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளந்தான் மாநிலத்தில் 17,326 பேரும், தெரெங்கானுவில் 37,792 பேரும் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தில் 15 மாத ஆண் குழந்தை உள்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் ஆற்று நீர் அபாய அளவையும் தாண்டியுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் அஹ்மத் இஸ்ராம் ஒஸ்மான் கூறுகையில்,
தெரெங்கானுவில் ஏற்பட்ட வெள்ளச் சூழலை வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும், கிளந்தானிலும் இதேபோன்ற கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
பஹாங், ஜோகூர் மற்றும் பேராக் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.