எல்லை ஒப்பந்தங்களை மீறிய பிறகு, சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் இப்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லையில் நிலைமையை பொறுத்தே அவர்களுடன் எம்மாதிரியான உறவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசுமுறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ள ஜெய்சங்கர், 2022ஆம் ஆண்டுக்கான முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சீனாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை உள்ளது. 45 ஆண்டுகளாக அமைதி நிலவியது, நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் இல்லை.
இராணுவப் படைகளை கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்ததால் அது மாறியது. நாங்கள் அதை எல்லை என்று அழைக்கிறோம். ஆனால் அது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (சீனாவுடனான எல்லை பகுதி). மேலும் சீனர்கள் அந்த ஒப்பந்தங்களை மீறினர்.
எல்லையில் நிலைமையை பொறுத்தே அவர்களுடன் எம்மாதிரியான உறவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும். இது இயற்கையான நியதி. எனவே தற்போது சீனாவுடனான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் ஜூன் 2020 க்கு முன்பே மிகவும் கண்ணியமானதாக இருந்தது" என்றார்.
பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே வன்முறை வெடித்ததை தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் இரு தரப்புக்கும் மோதல் முற்றியது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் இரு தரப்பும் அங்கு குவிக்க தொடங்கியது.
இதையும் படிக்க | பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக் கூடாதா?: ஐபிஎஸ் மணமகனின் திருமண ஊர்வலம்
பின்னர், 2020ஆம் ஆண்டு, ஜூன் 15ஆம் தேதி, இந்திய, சீன ராணுவ வீரர்களுடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக சீன தரப்பு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது. ஆனால், சீன தரப்பில் அதை விட அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்ததாக பின்னர், செய்தி வெளியானது.