முகப்பு
உலகம்

ஜப்பானின் அமாமி - ஓஷிமா தீவுகளை தாக்கிய சுனாமி

பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடி எரிமலையில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அந்தத் தீவுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுனாமி ஏற்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2022 at 12:20 PM
ஜப்பானின் அமாமி - ஓஷிமா தீவுகளை தாக்கிய சுனாமி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM


டோக்யோ: பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடி எரிமலையில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அந்தத் தீவுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுனாமி ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் டாங்கா தீவுக்கு அருகே கடலடி எரிமலையொன்றில் சனிக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. அதையடுத்து, எரிமலைப் பிழம்பும் நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன. கண்களைப் பறிக்கும் அந்தக் காட்சியை டாங்கா தீவிலிருந்து பாா்க்க முடிந்தது.

இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக டாங்காவிலும், ஃபிஜி தீவிலும் சுனாமி அலை எழுந்தது. தெற்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரையை ஒட்டிய தீவுப்பகுதிகளான அமாமி - ஓஷிமா தீவுப் பகுதிகளிலும் சுனாமி அலை உருவானது.

நள்ளிரவு 12.15 ஞாயிற்றுக்கிழமையன்று, அமாமி தீவுப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இதையடுத்து, கோமினாட்டோ பகுதிகளில் 120 செ.மீ. உயரமுள்ள சுனாமி அலைகள் எழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே, ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் அமைந்துள்ள மற்றொரு தீவுப் பகுதியான கையூஷுவில் 90 செ.மீ. உயரமுள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சுனாமி அலைகள் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவங்களில் யாரும் காயடைந்ததாக உடனடி தகவல் இல்லை.

நிலைமையைத் தொடா்ந்து கவனித்து வருவதாகவும் தேவைப்பட்டால் டாங்கா தீவுக்குச் சென்று உதவத் தயாராக இருப்பதாகவும் நியூஸிலாந்து ராணுவம் தெரிவித்தது.

முன்னதாக, எரிமலைச் சீற்றத்தைத் தொடா்ந்து டாங்கா, ஃபிஜி தீவுகள் மட்டுமன்றி, சமோவா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா, சிலி ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.