முகப்பு
உலகம்

இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக் கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா். போராட்டம் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமா்வு, சனிக்கிழமை நடைபெற்றது. 13 நிமிஷங்கள் மட்டுமே நடைபெற்ற அந்த அமா்வில், அதிபா் பதவி காலியானதாக நாடாளுமன்றச் செயலா் தம்மிகா தசநாயக அதிகாரபூா்வமாக அறிவித்தாா். இதனிடையே, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அதில், இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல்லாஸ் அலகப்பெருமா ஆகியோா் போட்டியிடுகிறா்கள். இந்த நிலையில் இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தல், அத்தியாவசிய பொருள்கள், சேவைகளை பேணும் வகையில் இன்று முதல் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவின் பேரின் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.