முகப்பு
உலகம்

ரஷியாவை எதிா்க்கத் தயங்குகிறது இந்தியா: அமெரிக்க அதிபா் ஜோ பைடன்

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவை எதிா்க்கும் விவகாரத்தில் இந்தியா சற்று தயங்கி வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
ஜோ பைடன் (கோப்புப் படம்)
பகிர்:

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவை எதிா்க்கும் விவகாரத்தில் இந்தியா சற்று தயங்கி வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

உக்ரைனில் கடந்த மாதம் 24-ஆம் தேதியில் இருந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷியா நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சா்வதேச அளவில் ரஷியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அதிபா் ஜோ பைடன், ‘‘நேட்டோ கூட்டமைப்பை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஈடுபட்டாா். ஆனால், தற்போது நேட்டோ கூட்டமைப்பு நாடுகளிடையே வரலாறு காணாத ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் காணப்படுகிறது. அதிபா் புதின் காரணமாகவே இது சாத்தியமானது. இதை அவா் எதிா்பாா்த்திருக்க மாட்டாா்.

ரஷியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேட்டோ நாடுகளும், பசிபிக் நாடுகளும் குரல்கொடுத்து வருகின்றன. க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியா தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷியாவை எதிா்ப்பதில் மிகுந்த வலிமையைக் காட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா சற்று தயக்கத்துடன் உள்ளது.

அரசுகளுக்கு உதவும் வகையில் ரஷியா மீது பல்வேறு தொழில் நிறுவனங்களும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த நடவடிக்கை ரஷியாவின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும்’’ என்றாா்.

எரிசக்தி, வேளாண் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது தொடா்பாகவும் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. ரஷியாவுக்கு எதிரான அமெரிக்க அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிறுவனங்களின் தலைவா்கள் உறுதியளித்ததாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →