ஆப்கானிஸ்தானில் 7 மாதங்களுக்குப் பிறகு உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவிகள் இன்று பள்ளிக்குச் சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கரோனா காரணமாகவும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளி சென்றனர். மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தலிபான்கள் அகற்றியுள்ள சூழ்நிலையில் 12 முதல் 19 வயது வரையிலான மாணவிகள் இன்று பள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தாது.
தலைநகர் காபூல் உள்பட பெரும்பாலான மாகாணங்களில் இன்று முழுவதுமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய மாணவ, மாணவியருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதே உலக நாடுகளின் வற்புறுத்தலுக்காக அல்ல என்று கல்வித்துறை செய்தித் தொடர்பாளர் ஆசிஸ் அகமது ராயன் கூறியுள்ளார்.