உக்ரைன் போரில் இதுவரை 121 குழந்தைகள் பலி
உக்ரைனில் இதுவரை 121 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை 121 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மூன்று வாரங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மிக முக்கிய நகரமான மரியுபோல் மீது ரஷியப் படைகள் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று காலை தலைநகர் கீவ் பகுதியிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
ரஷியாவின் தாக்குதலால் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியுபோல் துறைமுக நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ரஷியா தடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே உக்ரைன் போரில் இதுவரை 121 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 167 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று(மார்ச் 22) இரவு ருபிஸ்னே(Rubizhne) பகுதியில் ரஷிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி கைதாய் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.