பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த சில நிமிடங்களிலேயே பிரிட்டன் கொடியினை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் சீன நிறுவனங்களுக்கு அதிக அளவில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள தொழிற்சாலைக்கு பிரிட்டன் நாட்டின் கொடியினை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வந்துள்ளன. இந்த ஆர்டர்களினால் கடந்த சில தினங்களாகவே 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களது மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பிரிட்டன் நாட்டின் கொடி மற்றும் எலிசபெத் ராணி உருவம் பொறித்த கொடியினை தயாரிக்கும் பணியில் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் அந்த நிறுவனம் 5 லட்சம் கொடிகளை தயாரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் ஃபேன் ஐபிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக மீண்டும் சதமடித்த ரஜத் படிதார்
இந்தக் கொடிகளை இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்திற்கு செல்பவர்களும், சிலர் தங்களது வீடுகளில் கொடியினை ஏற்றி துக்கம் அனுசரிக்கவும் வாங்கிச் செல்கின்றனர். இந்தக் கொடியின் அளவு 21 செ.மீ-ல் இருந்து 150 செ.மீ-ஆக உள்ளது. கொடி ஒன்றின் விலை ஒரு டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடியினை ஆர்டர் கொடுத்தவர்கள் நேரடியாக கொடி தயாரிக்கும் இடத்திற்கே வந்து தங்களது ஆர்டரை பெற்றுச் சென்றதாகவும் அந்த நிறுவனத்தின் சார்பில் கூறப்படுகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்த நிறுவனம் ராணி எலிசபெத் இறப்பதற்கு முன்னதாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கொடியினைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.