ஈரானில் பதற்றம்: ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம் பெண் ஒருவர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம் பெண் ஒருவர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற பெண்களின் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐந்தாவது நாளாக ஈரானில் நடைபெற்ற போராட்டத்தின் போல பல பெண்கள் தங்களது ஹிஜாபைக் கழற்றி எறிந்தனர். சிலர் ஹிஜாபை தீ வைத்துக் கொளுத்தினர்.
Advertisement
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
சில இடங்களில் பெண்கள் தங்களது ஹிஜாப்களை ஒன்று திரட்டி கொளுத்தி அதனைச் சுற்றிலும் நடனமாடியும், கைதட்டியும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
ஈரானின் வட-மேற்கு நகரான சாகேஸ் பகுதியில், 22 வயது குர்தீஷ் இன பெண் அமினி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சுமார் 3 நாள்கள் கோமாவில் இருந்த அவர் நினைவு திரும்பாமலேயே பலியானார்.
தெஹ்ரானில், ஹிஜாப் அணியாமல் தனது சகோதரருடன் சென்ற இவர், கலாசார காவலர்களால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, காவலர்களால் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அங்கு பெண்களின் போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது.
மாஹ்சா அமினி மாரடைப்பால் மரணமடைந்ததாக காவல்துறை கூறும் நிலையில், அவரது தலையை காவல் வாகனம் ஒன்றில் காவலர்கள் இடித்துத் தள்ளியதாலேயே அவர் மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.