பாலஸ்தீனத்தின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் 60 மணிநேரம் தொடர்ந்து நடத்திய சோதனை முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து நடத்திய இந்த சோதனையின் அறிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
அகதிகள் முகாம்களிலும் ஜெனின் நகரத்திற்குள்ளும் நடத்தப்பட்ட இந்த 60 மணிநேர சோதனை நடவடிக்கையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை சோதனையிட்டதில் 60 தேடப்பட்டுவந்த தீவிரவாதிகளைப் பிடித்திருப்பதாகவும், 50 பலவகைப்பட்ட ஆயுதங்களையும், நூற்றுக்கணக்கான வெடிபொருள்களையும், இந்திய மதிப்பில் 22 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'இரு நாடுகள்' தீர்வைப் பற்றி பேச இது நேரமில்லை : இஸ்ரேல்!
மேலும், ஜூடேயா மற்றும் சமாரியாவில் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஹமாஸ் அமைப்போடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி பத்து நிலத்தடி மறைவிடங்களையும், ஏழு ஆய்வகங்களையும், இஸ்ரேல் ராணுவத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட ஐந்து கண்காணிப்பு மறைவிடங்களையும் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் இஸ்ரேல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாத குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.