காணாமல் போன இந்திய மாணவி: தகவல் தருபவருக்கு சன்மானம்!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலை வேளையில் அடுக்கு மாடிக் குடியிருப்பை விட்டு வெளியேறிய மாணவி திரும்பி வரவில்லை.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.
29 வயதான இந்திய மாணவி மயூசி பகத், ஜெர்ஸி நகரத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து ஏப்ரல் 29, 2019 அன்று மாலை வெளியேறியவர் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் மே 1, 2019 காவல்துறைக்குப் புகார் அளித்தனர்.
அமெரிக்க உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் ஜெர்ஸி நகர காவல் துறை பகத் காணாமல் போன வழக்கில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மாணவியின் இருப்பிடம் மற்றும் அவர் குறித்து தகவல்கள் தருபவருக்கு அமெரிக்க டாலர்கள் 10 ஆயிரம் வரை சன்மானம் அளிக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூயார்க் தொழில்நுட்பக் கழகத்தில் படித்து வந்த மயூசி, 1994 ஜுலையில் பிறந்தவர். காணாமல் போன இரவு அன்று, கருப்பு நிற டீ-சர்ட்டும் வண்ணமயமான பைஜாமாவும் அணிந்திருந்தார்.
ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகள் அவருக்குத் தெரியுமெனவும் தெற்கு பிளைன்பீல்ட் பகுதியில் அவரின் நண்பர்கள் வசித்ததாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: எக்ஸ் தளம் முடங்கியது!
2016-ல் அமெரிக்காவுக்கு மாணவ நுழைவுச்சீட்டில் மயூசி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.