சீனாவில் கண் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின்போது நோயாளியைத் தாக்குகிற விடியோ வைரலாகி வருகிறது.
அயர் சீனா குழுமத்தின் கண் மருத்துவமனைகளில் ஒன்று குய்காங் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 2019-ல் சிகிச்சை பெற வந்த 82 வயது மூதாட்டியை மருத்துவ அறுவை சிகிச்சையின்போது முன்பக்க தலையில் மூன்று முறை குத்துகிற சிசிடிவி பதிவுகள் தற்போது வைரலாகி உள்ளன.
நோயாளி, மருத்துவரின் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் அறுவை சிகிச்சையின்போது உண்டான எரிச்சலில் கண்ணைக் கைகளைக் கொண்டு தேய்க்க முயற்சிக்கிறார்.
இதனால் பொறுமை இழந்த மருத்துவர் அவரைத் தாக்குகிறார். படபடப்புக்குள்ளான நோயாளியை அருகில் உள்ள செவிலியர் பிடிப்பது போல அந்த விடியோவில் உள்ளது.
இது குறித்து அயர் சீனா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சையின்போது கண்பகுதியில் கைகள் பட்டால் எளிதாக தொற்று ஏற்படும். அந்த அபாயத்தைத் தவிர்க்கவே மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டார் எனவும் மருத்துவர் உள்பட மருத்துவமனை நிர்வாக அதிகாரியும் பணி நீக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோயாளியின் மகன், மருத்துவமனை இது குறித்து மன்னிப்பு கேட்டதாகவும் 500 யுவான் (70 அமெரிக்கா டாலர்கள்) இழப்பீடாக வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மூதாட்டிக்கு இடது கண் முற்றிலும் செயலிழந்துள்ளதாகவும் இந்த சம்பவத்தால் அது ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை எனவும் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடியோவை வெளியிட்டவர் வுஹான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஐ ஃபென். அவருக்கும் அயர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் முன்பே பகை இருந்ததாகவும் அதனால் அவர் இந்த விடியோவைத் தற்போது வெளியிட்டதாகவும் தெரிகிறது.