முகப்பு
உலகம்

நேபாளத்திற்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு 9 டன் அளவிலான நிவாரண உதவிகளை  இராணுவ விமானம் மூலம் அனுப்பியுள்ளது இந்தியா. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கிவருகிறது. நவம்பர் 7 அன்று 9 டன் அளவிலான நிவாரண உதவிகளுடன் கூடிய இந்திய விமானப்படையின் C-130 J விமானம் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  

பயங்கரமான நிலநடுக்கத்தால் இழப்புகளைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பிவருகிறது. கடந்த ஞாயிறு அன்று அவசர முதலுதவிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பாதிக்கப்பட்டுள்ள நேபால்கான்ஞ் நகரத்திற்கு இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதாவது, 'இந்தியா தன் அண்டைநாடுகளுக்கு அவசரகாலத்தில் உதவுவதை தன் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாக வைத்துள்ளது. அதன்படி நேபாளம் பாதிப்பிற்கு உள்ளானதும் முதலில் தன் ஆதரையும், நிவாரணங்களையும் வழங்கியது இந்தியாதான்' எனத் தெரிவித்துள்ளார். 

பாதிப்படைந்த நேபாளத்திற்கு முதன் முதலில் நிவாரணங்களை அனுப்பியது இந்தியாதான் என நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 11 டன் எடைகொண்ட 10 கோடி மதிப்பிலான அந்த நிவாரண உதவியில் மருத்துவப்பொருள்கள், தூங்கும் பைகள், கூடாரம் கட்டத் தேவையான பொருள்கள் ஆகியவை இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுவரை 21 டன்களுக்கும் அதிகமான உதவிகள் நேபாளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக  இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் நேபால் தன் இழப்புகளிலிருந்து மீழ, கட்டுமானம், கல்வி, மருத்துவம் என அனைத்து வகைகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →