பாகிஸ்தானிலிருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேறுவதற்கான காலக்கெடு, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேறுவதற்கான காலக்கெடு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1979-89இல் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததிலிருந்தே அந்த நாட்டைச் சோ்ந்த சுமாா் 17 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. இருந்தாலும், அண்மைக் காலமாக ஆப்கன் எல்லையையொட்டிய பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், இதில் ஆப்கன் அகதிகள் அதிக அளவில் பங்கேற்பதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.அதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
முன்னதாக, இந்த ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கன் அகதிகள் வெளியேற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாபாத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு முடிந்த பின்னும், ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால், அவர்கள் மாதந்தோறும் 100 அமெரிக்க டாலர்கள் வீதம் 8 மாதத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் தங்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை ஆப்கன் மக்கள் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.