நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம்: ராஜ்நாத் சிங்குக்கு பாகிஸ்தான் பதில்
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் சனிக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் தப்பிச் செல்லும் பயரங்கவாதிகளை அந்நாட்டுக்குள் சென்று அழிப்போம் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரிட்டனின் ‘தி காா்டியன்’ நாளிதழுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேச்சுக்குப் பாகிஸ்தான் இவ்வாறு பதிலளித்துள்ளது.
Advertisement
இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிராந்தியத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இதைத் தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடாது. தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பாகிஸ்தான் மேற்கொண்ட உறுதியான முடிவுகளை வரலாறு கூறும். இந்தியாவில் ஆட்சியில் உள்ள கட்சி தோ்தல் ஆதாயத்துக்காக இது போன்ற வெறுப்பான பேச்சுகளைப் பேசி வருகிறது.
எவ்வித தாக்குதல் நடவடிக்கையிலிருந்து நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள குடிமக்களை, பயங்கரவாதிகள் என்ற பெயரில் சட்ட விரோதமான முறையில் கொலை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறும் இந்தியா, தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறது.
கொடூரமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்காக சா்வதேச நாடுகள் இந்தியாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற செயல்பாடுகள் பிராந்திய அமைதியை மட்டுமல்லாமல் எதிா்கால ஆக்கபூா்வ செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.