முகப்பு
உலகம்

வங்கதேசமா? வன்முறை தேசமா?

வங்கதேசத்தில் மீண்டும் தலைதூக்கிய வன்முறையால் சமூக ஊடகங்கள் முடக்கம்

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 1:40 PM
போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்)
பகிர்:

வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக அமைதி நிலவிய நிலையில், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக 2,000க்கும் மேற்பட்டோர், வெள்ளிக்கிழமையில் டாக்காவில் ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர். ``நீதி வேண்டும்" என்ற கோஷங்களுடனும் பதாகைகளுடனும் அணிவகுத்துச் சென்றனர்.

இதனையடுத்து, கூட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன; ஒரு சமயத்தில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதாகக் கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர்.

Advertisement

இதன்மூலம், வங்கதேசத்தில் கடந்த ஏழு நாள்களாக ஓய்ந்திருந்த வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதே நேரத்தில், `பிரதமர் பதவி விலகவேண்டும்’ என்றும் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசு, நாடு முழுவதும் இன்ஸ்டாகிராம், டிக்டாக், வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களை மீண்டும் முடக்கப்பட்டது.

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு இட ஒதுக்கீடுதான் அடிப்படை பிரச்னை. பெண்கள், பின்தங்கிய மாவட்டங்கள், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் பிரச்னைக்கு காரணம்.

1971-இல் வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட போராளிகளின் வாரிசுகளுக்கு இரண்டு தலைமுறை கடந்தும் அரசு வேலைவாய்ப்புகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக 2018-இல் பெரிய அளவில் மாணவா் போராட்டம் வெடித்தது. அதைத் தொடா்ந்து ஷேக் ஹசீனா அரசு அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

கோப்புப் படம்

கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தின் உயா்நீதிமன்றம் மீண்டும் 30% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று தீா்ப்பு வழங்கியது. அந்தத் தீா்ப்பை எதிர்த்துத்தான் மாணவா்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாறியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இளம் பட்டதாரிகளுக்கு தரமான வேலைகள் இல்லாதது அதிருப்தியை தீவிரப்படுத்தியுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.