வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அங்குள்ள இந்திய விசா மையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்து, அவர் இந்தியாவில் அடைக்கலமானதைத் தொடர்ந்து ராணுவ ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முஹம்மது யூனுஸ் இன்று இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்றி இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலானவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்ட பின்னர் தற்போது வங்கதேசத்தில் இந்திய விசா மையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தங்களது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய விசா விண்ணப்பிக்கும் மையம் விசா விண்ணப்பிக்க அடுத்த தேதி எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், பாஸ்போர்ட்டுகள் அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ளபடும் என்று அறிவித்துள்ளது.
வங்கதேசத்தின் தாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து 190 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அங்கிருந்து அழைத்து வந்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையம் தவிர்த்து, இந்தியாவின் துணை ஆணையங்கள் மற்றும் தூதரகங்கள் சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெட் பகுதிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.