ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய வம்சாவளியான லக்ஷ்மன் நரசிம்மன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அண்மைக் காலங்களில் நிகழும் தொடரும் விற்பனைச் சரிவுகளால், வணிகத்தைத் திருப்புவதற்காக அழுத்தம் கொடுக்கும் சூழலில் உள்ளது என்று கூறி, ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியைப் பணிநீக்கம் செய்துவிட்டு, வேறொரு அதிகாரியை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறைவான நுகர்வோர், சீனாவில் உள்ள கடினமான சந்தை நிலைமைகள் ஆகியவைதான் ஸ்டார்பக்ஸின் தலைமை மாற்றப் பிரச்னைகளுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மனை பணிநீக்கம் செய்து, சிபோட்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரையன் நிக்கோலை, ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும் ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஸ்டார்பக்ஸின் தலைவர் மெல்லடி ஹோப்ஸன் கூறியதாவது, "நிறுவனத்தில் ஏற்பட்ட சில சவால்களை எதிர்கொண்டு, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், வணிகத்தை மேம்படுத்துவதிலும், லக்ஷ்மன் சிறந்த முறையில் பணியாற்றினார்.
நாங்கள் அனைவரும் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர் எதிர்காலத்தில் பெரிய விஷயங்களைச் செய்வார் என்பதை அறிவோம்.
நிறுவனத்திற்கு லக்ஷ்மன் அளித்த பங்களிப்புகளுக்கும், வாடிக்கையாளர்கள் மீதான அவரது அர்ப்பணிப்புக்கும், நிறுவனத்தின் சார்பாக, நான் உண்மையிலேயே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெல்லடி ஹோப்ஸன் கூறினார்.
இருப்பினும், லக்ஷ்மன் நரசிம்மன் கடந்த மாதம் போட்டியொன்றில், ``நான் எப்போதும் மாலை 6 மணிக்குமேல் பணிபுரிய மாட்டேன்; அதற்குள்ளாகவே, அனைத்து வேலைகளையும் முடித்து விடுவேன்’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், லக்ஷ்மன் நரசிம்மன் கொடுத்த பேட்டியால்தான், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.