இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் காஸா மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்துவருகின்றனர். உணவுப் பொருள்களும், மருந்துப்பொருள்களும் தேவைப்படும் காஸாவிற்குள் குண்டுகள் மட்டுமே வீசப்படுகின்றன.
இந்த போர்களத்தின் நடுவே அங்குள்ள பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை அமைப்பு பாதிக்கபட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. இந்த அமைப்பின் அவசர ஊர்தி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் துணை மருத்துவப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முகமது அல் ஒமாரி எனும் துணை மருத்துவப்பணியாளர் இஸ்ரேலின் நேரடித்தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு தெரிவித்துள்ளது. காயப்பட்ட மக்களை அல் அஹில் பாப்டிஸ்ட் மருத்துவமனையிலிருந்து தெற்குப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் இரண்டு துணை மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: பாலஸ்தீனக் குழந்தை மீது ராணுவ நாயை ஏவிய இஸ்ரேல்!
மேலும் ஆறுவயது சிறுமியை மீட்கச்சென்ற அவசர மீட்புக்குழு காணாமல் போயிருப்பதாக இந்த அமைப்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறிவருவதாக உலக அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. எனினும் இஸ்ரேல் யாருக்கும் செவிசாய்ப்பதாய் இல்லை.
போரின்போது தூய்மைப் பணியாளர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், மீட்புப் பணியாளர்களையும் காக்கவேண்டும் எனும் சர்வதேச சட்டத்தை பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு நினைவூட்டி பதிவு ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
'தீவிரவாதிகள் அவசர மீட்பு வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். பள்ளி மற்றும் வழிபாட்டுத்தளங்களில் ஒளிந்திருக்கிறார்கள் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியே இந்த வரம்பு மீறிய தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்துகிறது.