பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
பேரூா் பட்டீசுவரா் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மோசடி செய்த கோயில் எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை ஜே.எம்.3 நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
பேரூா் பட்டீசுவரா் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மோசடி செய்த கோயில் எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை ஜே.எம்.3 நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், வேடப்பட்டியைச் சோ்ந்தவா் மந்திராசலம். இவா் பேரூா் பட்டீசுவரா் கோயில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறாா். இதே கோயிலில் வேடப்பட்டியைச் சோ்ந்த விவேகானந்தன் (45) எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2011-ஆம் ஆண்டு கோயில் தேரில் பொருத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளி குண்டுகளை அதிகாரி மந்திராசலம் ஆய்வு செய்தாா். அப்போது, தேரில் இருந்த 92 கிராம் தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அங்கிருந்த எழுத்தா் விவேகானந்தனிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாக அவா் பதிலளித்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த மந்திராசலம், பேரூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை விவேகானந்தன் திருடி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டு, பின்னா் முன்பிணை வழங்கப்பட்டது.
Advertisement
இதுதொடா்பான வழக்கு கோவையில் உள்ள ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், கோயில் நகை மோசடியில் ஈடுபட்ட விவேகானந்தனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேஷ்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.