இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் சிக்கித்தவிக்கும் காஸா மண்ணில், ரத்தம் காய்ந்தபாடில்லை. மூன்று மாதத்திற்கு மேலாக தொடரும் இந்தப் போரில் 27,000-த்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட காஸா மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக பாலஸ்தீன கைதிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனக் கைதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு காஸா ஆளாகிவரும் சூழலில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட காஸா மக்கள் மீது கொடூரமான குற்றங்கள் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் முன்னாள் கைதிகளிடமிருந்து பெறப்படும் தகவலின்படி, அவர்கள் கைதிகளை சித்திரவதை செய்கின்றனர் என்பது நிரூபனமாகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இங்கு கைதிகள் எனக் குறிப்பிடப்படுபவர்களில், பெண்களும், குழந்தைகளும், மருத்துவர்களும் கூட அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த எந்த தகவல்களையும் அளிக்க இஸ்ரேல் அதிகாரிகள் மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.