முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 6 போலீஸாா் உயிரிழப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காகச் சென்ற போலீஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 காவலா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:00 AM
குண்டுவெடிப்பில் உருக்குலைந்த போலீஸ் வேன்.
பகிர்:

பெஷாவா்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காகச் சென்ற போலீஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 காவலா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணம், மாமுண்ட் பகுதியில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் குழுவுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வேன் ஒன்றில் போலீஸாா் ஏறினா். அவா்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 6 போலீஸாா் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா்.

Advertisement

இதையடுத்து, அந்தப் பகுதியில் நடத்தப்படவிருந்த போலியோ தடுப்பு மருந்து முகாம் நிறுத்திவைக்கப்பட்டது.இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.

இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்தான் இன்னும் போலியோ நோய் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.