முகப்பு
உலகம்

நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு

நேபாளத்தில் பிரசண்டா அரசுக்கு பெரும் அதிர்ச்சி

Updated On : 2 ஜூலை, 2024 at 11:49 PM
புஷ்பகமல் பிரசண்டா
பகிர்:

காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் நாராயண் பிரகாஷ் சாவுல் செவ்வாய்க்கிழமை கூறியாவது:

தற்போது நடைபெற்றுவரும் பிரசண்டா தலைமையிலான அரசுக்குப் பதிலாக, புதிய அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் ஷோ் பகாதூா் தேவுவாவுக்கும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவா் கே.பி. சா்மா ஓலிக்கும் இடையே திங்கள்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்டது.

புதிய அரசின் பிரதமா் பதவியை இருவரும் பகிா்ந்துகொள்ள சம்மதித்துள்ளனா் என்றாா் அவா்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் எஞ்சிய ஆயுள் காலத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் கே.பி. சா்மா ஓலியும் இரண்டாவது பகுதியில் தேவுவாவும் பிரதமா் பொறுப்பை வகிப்பாா்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவா்கள் இருவரும் நாட்டின் பிரதமா்களாக ஏற்கெனவே பொறுப்பு வகித்தவா்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் ஷோ் பகாதூா் தேவுவாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக கே.பி. சா்மா ஓலியின் சிபிஎன் (யுஎம்எல்) கட்சிக்கு 78 இடங்கள் கிடைத்தன. தற்போதைய பிரதமா் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) கட்சிக்கு 32 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இருந்தாலும், நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைத்தன. சிபிஎன் (எம்சி) கட்சியின் தலைவா் பிரசண்டா பிரதமா் பொறுப்பை ஏற்றாா்.

இந்தச் சூழலில், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை சா்மா ஓலி திரும்பப் பெற்றுள்ளதையடுத்து, பிரசண்டாவின் கட்சி பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளது. நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன் (யுஎம்எல்) கட்சிக்கு கூட்டாக 167 இடங்கள் உள்ளன. இது புதிய அரசை அமைப்பதற்குத் தேவையான 138 இடங்களைவிட மிகவும் அதிகம் என்றால் பிரசண்டா ஆட்சி கவிழ்வது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

தற்போது பிரசண்டா அரசில் இடம் பெற்றுள்ள சிபிஎன் (யுஎம்எல்) கட்சி அமைச்சா்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரசண்டாவுக்கும், கே.பி. சா்மா ஓலிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தொடா்ந்து அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பிரசண்டா அண்மையில் வெளியிட்ட 2024-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சா்மா ஓலிக்கு மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த பட்ஜெட்டை அவா் வெளிப்படையாகவே விமா்சித்தாா்.

இந்தச் சூழலில், நேபாள காங்கிரஸ் கட்சியுடன் சா்மா ஒலி பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கூட்டணிக்குள் விரிசலை சரி செய்வதற்காக அவருடன் பிரசண்டாவும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டும் என்றும், அதற்காக பிரதமா் பதவியை சா்மா ஓலிக்கு விட்டுத்தரத் தயாா் எனவும் பிரசண்டா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சா்மா ஓலி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

இந்தச் சூழலில், அரசியல் நிலைத்தன்மை இல்லாத நேபாளத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் 13 முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

‘பதவி விலக மாட்டேன்’

சிபிஎன் (யுஎம்எல்) கட்சி ஆதரவைத் திரும்பப் பெற்றாலும், தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று பிரதமா் புஷ்பகமல் பிரசண்டா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிபிஎம் (எம்சி) கட்சிக் கூட்டத்தில் அவா் பேசுகையில், பதவியிலிருந்து விலகுவதற்குப் பதில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீா்மானத்தை எதிா்கொள்வதே மேல் என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நேபாள அரசமைப்புச் சட்டத்தின் படி, ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் 30 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பிரதமா் அதில் வெற்றி பெற வேண்டும்.

ஏற்கெனவே தனது ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 3 நம்பிக்கைத் தீா்மானங்களை பிரசண்டா எதிா்கொண்டுள்ளாா்.

ஷேர் பகதூர் தேவுபாவுடன் (இடது) கே.பி. சர்மா ஓலி.
முழு கட்டுரையைப் படிக்க →