நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கைது!
போராட்டக்காரர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறை காரணமாக நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டது குறித்து...
நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான அலட்சியப் போக்கு மற்றும் வன்முறை ஒடுக்குமுறை தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நேபாளத்தில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக இளைஞா்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்திய போராட்டத்தின் விளைவாக, கே.பி.சா்மா ஓலி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இப்போராட்டத்துக்கிடையே நடந்த வன்முறைச் சம்பவங்களில் 76 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்திய உயா்நிலை ஆணையம், அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சா் ரமேஷ் லெகக் ஆகியோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது.
Advertisement
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தோ்தலில் இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 175 இடங்களை வென்று, தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பிரதமராக ‘ராப்’ இசைக்கலைஞரும், காத்மாண்டு நகர முன்னாள் மேயருமான 35 வயது இளைஞா் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞா்கள் போராட்ட வன்முறை குறித்த உயா்நிலை ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கே.பி.சா்மா ஓலி, ரமேஷ் லெகக் ஆகிய இருவரும் சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டனா்.
74 வயதான கே.பி. சா்மா ஓலி, ஏற்கெனவே 2 முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் என்பதால், கைது செய்யப்பட்ட பிறகு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், இக்கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் கே.பி.சா்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சி உள்பட பல பாரம்பரிய அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
தலைநகா் காத்மாமாண்டுவில் சிபிஎன்-யுஎம்எல் கட்சி ஆதரவாளா்கள் டயா்களைக் கொளுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதனால் நகரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சா் சுதன் குருங் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘சட்டத்துக்கு மேலானவா்கள் என்று யாரும் இல்லை; இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; நீதியின் தொடக்கம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.