போராட்ட ஒடுக்குமுறையில் பங்கு; நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது!
போராட்டக்காரர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறை காரணமாக நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டது குறித்து...
போராட்டக்காரர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறை காரணமாக நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்ட்டனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மாபெரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு குறுகிய கால சமூக ஊடகத் தடைக்கு எதிராகத் தொடங்கப்பட்டு இருந்தாலும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலைக் கண்டித்து போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இப்போராட்டத்தால் நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, போராட்டத்தின் முதல் நாளில் நடந்த மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 19 பேர் கொல்லப்பட்டனர். மறுநாள், நாடாளுமன்றம் உள்பட பல அரசுக்கட்டடங்கள் தீக்கிரையாகின. இந்தப் போராட்டத்தில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர்கள் உள்பட அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் ராஜிநாமா செய்ததோடு ஆட்சியும் கலைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலிக்கும் அவருடன் இருந்த சில அமைச்சர்களும் தொடர்பு இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற அடுத்த நாளே இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.