முகப்பு
உலகம்

உக்ரைனில் போர்நிறுத்தத்துக்கு வழிவகுக்குமா ஸ்விஸ் மாநாடு?

உக்ரைன் அமைதி மாநாட்டில் சுமார் நூறு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Updated On : 16 ஜூன், 2024 at 3:18 PM
பகிர்:

உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படவும், அமைதி நிலவவும், தேவையான சமாதான நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச மாநாடு ஸ்விட்சர்லாந்தில் சனிக்கிழமை(ஜூன் 15) தொடங்கியது. அதில், சுமார் நூறு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

உக்ரைன் அமைதி மாநாட்டின் இறுதி நாளான இன்று(ஜூன் 16) முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ள உலகத் தலைவர்கள், போர் நிறுத்தம் தொடர்பாக அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், இருதரப்பிலும் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள வீரர்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும், ரஷியாவிலுள்ள உக்ரைன் குழந்தைகள் தாயகம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் சர்வதேச சமூகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியா உள்பட சௌதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் இறுதி அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மாநாட்டில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பேசுகையில், வெகு விரைவில் போரில் முடிவு எட்டப்படுமென நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலிருந்து சுமார் 20,000 குழந்தைகள் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாடு, உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →