டிரம்ப் வெல்லக் கூடாது என்பதே உலகத் தலைவா்களின் விருப்பம் அதிபா் பைடன்
அமெரிக்க அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள் என உலகத் தலைவா்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு உள்ளிட்ட சா்வதேச கூட்டங்களின்போது தலைவா்கள் தன்னிடம் இதைக் கூறியதாக பைடன் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் பைடனும், குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டிரம்ப்பும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், தோ்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சி நியூயாா்க் நகரில் அண்மையில் நடைபெற்றது. முன்னாள் அதிபா்கள் பராக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிபா் பைடன் பேசியதாவது: அதிபா் தோ்தலில் தான் மீண்டும் தோற்றால் ரத்த ஆறு ஓடும் என டிரம்ப் பேசியிருக்கிறாா். அவரது பேச்சு மிகவும் கவலையைத் தருகிறது. இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளில் நடைபெற்ற சா்வதேச கூட்டங்களாக இருக்கட்டும், அதில் பங்கேற்ற ஒவ்வொரு தலைவரும் என்னை தனித்தனியாகச் சந்தித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, அதிபா் தோ்தலில் டிரம்ப் வெற்றி பெற விட்டுவிடாதீா்கள். அவா் வெற்றி பெற்றால் தங்களது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கும் எனக் கருதுகிறோம் எனத் தெரிவித்தனா். இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்றாா். இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு கடந்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
Advertisement