ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!
தீபாவளி விருந்தில் ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது.
தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு இறைச்சி, பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது.
கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து மாளிகையில் (10, டௌனிங் ஸ்ட்ரீட்) பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் ஹிந்துத்துவ தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஹிந்து பண்டிகை விருந்தில் மதுவும் மாமிசமும் அளிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆனபோதிலும், இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் எந்தவிதமான பதிலும் அளிக்காமல் இருந்தார்.
Advertisement
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, மாமிசம் வழங்கியதற்கு பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமையில் (நவ. 15) மன்னிப்பு கோரியுள்ளது. இனிமேல், இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிக்க: டேராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்! சட்ட நிபுணர்களை நாடும் காவல்துறை!!
தீபாவளி விருந்து இரவு உணவு அட்டவணையில் இறைச்சி, பீர், ஒயின் முதலானவை இருந்ததாக சில பிரிட்டிஷ் ஹிந்துக்கள் கூறினர். ஹிந்துக்கள் பங்குபெறும் ஹிந்து பண்டிகையில் மதுவும் மாமிசமும் வழங்குவது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விருந்தில் மது, மாமிசம் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை, முக்கிய பிரிட்டிஷ் ஹிந்து பண்டிதரான சதீஷ் கே ஷர்மாவும் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, ``மது, மாமிசத்தால் புனிதக் கொண்டாட்டமே பாதித்து விட்டது. இந்த சம்பவம் கவனக்குறைவு என்றால் சோகமளிக்கக் கூடியதாக உள்ளது; வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில், விருந்தில் மது, மாமிசம் அளிப்பதன்மூலம் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கு பிரதமர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்றுதான் தோன்றும்’’ என்று தெரிவித்தார்.