ஆப்கானிஸ்தானில் ஆற்றில் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்சான் மாகாணத்தில் பயணிகள் வாகனம் ஒன்று கோக்சா ஆற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வாகனம் மாகாணத்தின் தலைநகரான பைசாபாத் நகரை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை வெளியே எடுப்பதற்காக தேடி வருவதாக அதிகாரி அமிரி குறிப்பிட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் ஒருவர் சாரதி எனவும் மற்றவர்கள் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உட்பட நெருங்கிய உறவினர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.
மோசமான உள்கட்டமைப்பு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், முந்திச் செல்வது, அதிக வேகம் போன்ற காரணங்களால் ஆப்கனில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.