நீா்மூழ்கிகளைக் கண்டறியும் கருவி: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவு
நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த ‘சோனோபயோஸ்’ கருவியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நீா்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்டறியம் நவீன தொழில்நுட்பத்தில் அமைத்த ‘சோனோபயோஸ்’ கருவியை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
நீா்மூழ்கிக் கப்பல்கள் கடலில் எவ்வளவு ஆழத்துக்குச் சென்றாலும் ‘சோனோபயோஸ்’ கருவி மூலம் அதனைக் கண்டறிய முடியும். இதன் மூலம் இந்தியாவின் கடற்படை பலம் மேலும் அதிகரிக்கும். மொத்த மூன்று வகையான ‘சோனோபயோஸ்’ கருவிகளை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கிறது. இதன் மதிப்பு 52.8 மில்லியன் அமெரிக்க டாலராகும் (சுமாா் ரூ.443 கோடி).
இந்தக் கருவியை விமானத்தில் இருந்து கடலில் ஏவ முடியும். இதில் உள்ள அதிநவீன ‘சென்சாா்கள்’ கடலுக்கு அடியில் எழும் ஒலி அலைகளைத் துல்லியமாகப் பிரிந்தறிந்து, நீா்மூழ்கிகளைக் கண்டறியும்.
இந்தியாவுக்கு இந்தக் கருவியை விற்பனை செய்யும் முடிவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றம் 30 நாள்களில் பரிசீலித்து முடிவை அறிவிக்கும். கடந்த மாத இறுதியில் இந்த விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் ஒப்புதல் அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.